திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.91 திருவடகுரங்காடுதுறை பண் - சாதாரி |
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே.
|
1 |
மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே.
|
2 |
முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேற்
சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே.
|
3 |
கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே.
|
4 |
கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே.
|
5 |
கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே.
|
8 |
பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண் டோங்கிய அடிகளாரே.
|
9 |
கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே.
|
10 |
தாழிளங் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்
கோழையா அழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |